புதிய பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வாரம் முன்னெடுப்பு

நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது.

தேசிய பொருளாதார சபை நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவத்தின்போது நாட்டுக்குத் தேவையான துரித மாற்றங்கள் மற்றும் தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

எட்டாவது முறையாக கூடியிருக்கும் தேசிய பொருளாதார சபை நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி யினால் கடந்த வருடம் அமைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சரத் அமுனுகம, நிமல் சிறிபால த சில்வா, மங்கள சமரவீர. ஜோன் செனவிரத்ன, சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்கிரம, பைஸர் முஸ்தபா, நவின் திசாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, தேசிய  பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லிலத் பி சமரகோன், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமைச்சரவையின் செயலாளர் சுமித் அபேசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ருவன் சந்திர, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.