சூட்சுமமாக 1 கோடி 10 லட்ச ரூபா மோசடிசெய்த பெண் ஊழியர் ! மாடிவீடு கட்டி திறக்கவிருந்தவேளையில் மாட்டினார்

(காரைதீவு   நிருபர் சகா)

இடமாற்றலாகிச்சென்ற வைத்தியர்களின் சம்பளப்பணத்தை 4வருடங்களாக சூட்சுமமான முறையில் பண மோசடி செய்த  சுகாதாரத்திணைக்கள பெண்ஊழியரொருவர் மாட்டியுள்ளார்.

அவ்வாறு அவர் சுருட்டிய பணம் ஒரு கோடி 10 லட்ச ருபாவைத்தாண்டுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

விசாரணையின்போது அவர் தான் இம்மோசடியைச்செய்ததாக ஒப்பக்கொண்டுள்ளார்.

இப்பாரிய துணிகர பணமோசடி  அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பிராந்தியக்காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்பிராந்தியத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

இடமாற்றலாகிச்சென்ற 5 வைத்தியஅதிகாரிகளினது சம்பளப்பணத்தை அம்பாறை நகரிலுள்ள ஜந்து வௌ;வேறு வங்கிக்கிளைகளில் தனது கணவரின் பெயரில் திறக்கப்பட்ட வங்கிக்கணக்கிற்கு கடந்த 4வருடங்களாக அனுப்பிவந்துள்ளார்.
இப்பெரும் மோசடியைச் செய்த அப்பெண்மணி மகாஓய கல்விவலயத்தில் முன்னர் பணியாற்றி இடமாற்றலாகி கடந்த 2013முதல் சுகாதாரப்பணிமனையில் கடமையாற்றிவந்துள்ளார்.
இவரது கணவர் இராணுவத்திலிருந்து இடைநடுவில் கைவிட்டுவந்தவரென்று விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முதற்கட்டத்தில் 95லட்சமென அறியவந்தபோதிலும் அடுத்தகட்ட விசாரணையின்போது இத்தொனை 1கோடி 10லட்சருபாவைத்தாண்டுவதாக பிரதம கணக்காய்வாளர் எச்.எம்.ஏ. றசீட் தெரிவித்தார்.

இப்பாரிய பணமோசடி செய்த அவர் அம்பாறை நகரில் அதிநவீன மாடிவீடொன்றைக் கட்டியுள்ளார். அத்துடன் பல இடங்களில் காணி மற்றும் வீடுகளையும் கொள்வனவு செய்துள்ளார்.

தான் கட்டிய மாடிவீட்டின் புதுமனைபுகுவிழாவிற்காக அலுவலகத்தில் லீவு எடுத்திருந்தவேளை அக்காலப்பகுதி சம்பளம்வழங்கும் காலமாகையால் தற்காலிகமாக வேறொரு அலுவலரை அதற்கு பணிக்கமர்த்தியவேளை இம்மோசடி அம்பலத்திற்கு வந்தது.

தனது புதுமனை குடிபுகுந்த அன்றே அவர் மாட்டியுள்ளார். பொலிஸ் வீட்டுக்காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விசாரணையின்போது 2013முதல் 2017 டிசம்பர் வரை தான் மோசடி செய்த பணத்தை மீளச்செலுத்துவதாக அந்த பெண் ஊழியர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து விசாரணை முன்னெடுத்துச்செல்லப்படுகின்றது.