கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இலவச கல்விக்கான போராட்டத்தின் போது கைதுசெய்யபட்டு சிறைவைக்கப்பட்ட பல்கலைக் கழக மாணவ செயற்பாட்டாளர்களர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று புதன்கிழமை  பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பல்கலைக்கழக விடுதி பகுதியிலிருந்து சுலோகங்கள் மற்றும் பதாதைகளுடன் பிரதான வீதிக்கு வந்த இம்மாணவர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

எமது மாணவர் சங்கப்பிரதிநிதிகள் சுயநலத்திற்காக அன்றி மாணவர்களது உரிமைகள் மற்றும் நலன்களுக்காகவே போராடினார்கள். இந்நிலையில் மாணவர்களது உரிமைகளுக்காக போராடிய எமது தலைவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது எந்தவகையில் நியாயமானது என அவர்கள் இதன் போது கேள்வியெழுப்பினர்.