புதிய அரசியல் சாசனத்தை இவ்வாண்டுக்குள் உருவாக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும்

மகிந்த ராஜபக்சவை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகளின் மொத்த வாக்கு அவரை விட அதிகமான மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த பெற்ற வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய அரசியல் சாசனத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்க அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டங்களில் வேட்பாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,.. மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரசிங்க போன்ற அனைத்து கட்சித் தலைவர்களையும் நாம் மதிக்கின்றோம்.நாட்டின் நிலையான ஒரு சமாதானத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பிரிக்கப்பட்டாத நாட்டுக்குள் தீர்வு ஒன்று பெற உதவ வேண்டும்.
எமக்கு அரசியல் எதிரிகள் என்று எவறும் கிடையாது.அனைவரையும் நாம் மதிக்கின்றோம்.சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வாக்குக் கொடுத்தமைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.மேலும் பொதுஜன பொரமுன தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 2002ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் அர்த்த புஸ்டியான ஒரு உள்ளக தீர்வு இவ்வகையான கருத்துக்களை இந்த நாட்டினுடைய ஏனைய தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிட்டு கூடுதலான ஆசனங்களை பெற்றுள்ளது. எனவே பிரிக்கப்படாத நாட்டுக்குள் உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வை தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றனர் என தெரிவித்தார்.