சட்டவிரோத மின்சாரம் தாக்கி பண்ணையாளர் பரிதாபகரமாக பலி!

மட்டக்களப்பு மாவட்டம் கண்ணபுரம் 35 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஒருவா் இன்றையதினம்(21-03-2018) புதன்கிழமை அதிகாலை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாா். குறித்த சம்பவத்தில் 31 வயதுடைய தங்கராசா மகேஸ்வரன் என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.....

தமது கால்நடைகளை சாய்த்து வருவதற்காக 35 ஆம் கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோணாவலை 32 ஆம் கிராம பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சட்டவிரோதமான முறையில் விடப்பட்டிருந்த மின்சாரத்தினால் தாக்கப்பட்டு ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.  இந்நிலையில் இவ்விடத்திற்கு விரைந்த கோணாவலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

32 ஆம் கிராமம், கோணாவலை பகுதியில் பெரும்பான்மை இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அப்பகுதி காடு சார்ந்த பகுதியாகக் காணப்படுவதனால் அங்கு சிங்கள மக்களினதும் (அம்பாறை மாவட்டம்) , தமிழ் மக்களினதும் (மட்டக்களப்பு மாவட்டம்) , பெரும்பாலான பண்ணையாளர்களின் கால்நடைகள் மேய்ந்து வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்றையதினம் அதிகாலை தமது கால்நடைகளை சாய்க்கச் சென்ற பண்ணையாளர் சட்டவிரேத மின்சாரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.