கல்லடி பாலத்தில் நடைபெறும் சம்பவங்களை அவதானிப்பதற்காக சி.சி.டி.வி கமெரா

கல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெராக்களைப் பொறுத்துவதற்கான நடவடிக்கையை, புதிய மாநகரசபை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் கடமையாக செய்யவேண்டுமென, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார். 


மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கிய இடமாகவும் கேந்திர நிலையமாகவும் கல்லடிப்பாலம் உள்ளதாகவும் அதன் ஊடாக நடைபெறும் சம்பவங்களை அவதானிப்பதற்காகவும் இதனைச் செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக கல்லடிப் பாலத்தின் ஊடாக தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதில் சிலர் தற்கொலையா, கொலையா என்று சந்தேகிக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை சி.சி.டி.வி கமெராக்களைக் பொறுத்துவதன் ஊடாக தடுக்கமுடியும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், எங்காவது கடத்தப்படும் வாகனங்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்லடிப் பாலம் ஊடாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் கண்டறியக் கூடிய நிலையை இதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையேற்கும் உறுப்பினர்கள் முதலாவது கையெழுத்தை இந்த நடவடிக்கைக்கு இடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.