கல்லடியில் பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டை விடுத்த காத்தான்குடி இளைஞர்கள் மூவருக்கு விளக்கமறியல்

கல்லடிப் பிரதேசத்தில், வீதியில் சென்ற பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டை விடுத்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞ​ர்கள் மூவரையும், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டார்.

சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை மாலை, கல்லடி, பீச் வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மீது, அப்பகுதியில் இருந்த மேற்படி இளைஞர்கள் மூவரும், பாலியல் சேட்டை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பெண் சத்தமிட்டுக் கத்தியமையால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இணைந்து, இளைஞர்களை மடக்கிப்பிடித்து, நைப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மூவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட   விசாரணையில் குறித்த மூவரும் 18, 20, 23 வயதுடைய இளைஞர்கள் எனவும் மதுபோதையில் இருந்துள்ளனரெவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்,  நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் நேற்று (23) ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.