உலக காடுகள் தினத்தை முன்னிட்டு கல்லடியில் சிரமதானப் பணியும் மரநடுகை நிகழ்வும்

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வன பரிபாலன திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணியும் மரநடுகை நிகழ்வும் மட்டக்களப்பு கல்லடியில் புதன்கிழமை 21ஆம் திகதி நடைபெற்றது.


மார்ச் 21ஆம் திகதி உலக காடுகள் தினம் பல பாகங்களிலும் அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந் நிகழ்வு கல்லடி டச்பார் பிரதேசத்தில் அமைந்துள்ள வன பரிபாலன திணைக்களத்தின் கடற்கரை பூங்கா வளாகத்தில், மட்டக்களப்பு வலய வன அதிகாரி எஸ்.பிரபாகரன் தலைமையில்  நிகழ்ச்சித் திட்டங்கள் நடைபெற்றது.

இதன்போது கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காக வருகைதருவோரால் அங்கு கைவிட்டுச் செல்லப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள், தகர பேணிகள் உள்ளிட்ட குப்பைகளை சிரமதானம் மூலம் துப்பரவுசெய்ததுடன் அவ் வளாகத்தில் நிழல் மரக் கன்றுகளும் நடப்பட்டது.


இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி கேமந் விஜயரத்ன, உதவி வன அதிகாரிகளான அஜித் குரே, எம்.ஏ.ஜாயா, மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பயிற்சி முகாம் நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி எம்.எம்.எஸ்.பிரேம்லால்  உள்ளிட்ட வன பரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.