உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகிறது

உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது.

340 உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றது.

உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரித்தல் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் என்பன உள்ளிட்ட மேலும் சில சிக்கல் நிலைமைகளின் காரணமாக தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும், உள்ளாட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் 20 ஆம் திகதி குறித்த பணிகளை ஆரம்பிக்க உள்ளாட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்போது, உள்ளாட்சி மன்றங்களில் நூற்றுக்கு 50 வீதத்துக்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்த அரசியல் கட்சிகள், எவ்வித பிரச்சினைகளும் இன்றி, ஆட்சியமைக்கும் நிலைமை ஏற்பட்டது.

எனினும், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தமையினால், சில உள்ளாட்சி மன்றங்களில் வெற்றி பெற்ற அரசியல் கட்சி அல்லாத ஏனைய கட்சிகள் ஆட்சியமைக்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.