புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மட்டக்களப்பு பொலிஸார்


சித்திரைப் புத்தாண்டு காலங்களில் பாதுகாப்புடன் இருக்குமாறு கோரும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களுக்குத் அறிவித்துள்ளனர்.

இது குறித்த துண்டுப் பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளினாலும் நேற்று (10) பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட அப்பிரசுரங்களில், “புத்தாண்டை ஒட்டிய காலப்பகுதிகளில் வீட்டை விட்டுச் செல்வதாயின் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை முறையாகப் பூட்டி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதிமிக்க உடமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணக் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வியாபார நிலையங்கள் ஆகிய இடங்களுக்கு வருகைதரும்போது விழிப்பாக இருங்கள்.

உங்கள் வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கும்போது கூட பூட்டி வைத்து விட்டுச் செல்லுங்கள். ஏதாவது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளின்போது, தயக்கமின்றி உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும்.

பண்டிகைக் காலத்தில் அறிமுகமான மற்றும் அறிமுகமில்லாத மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் உங்களது பெறுமதியான உடமைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.