வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று (10) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ந.கோணலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் க.கணேஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.

இதன்போது நடாத்தப்பட்ட திறந்த வாக்கெடுப்பில் கோணலிங்கம் 10 வாக்குகளையும் கணேஸ் 08 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில், இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நமசிவாயம் கோணலிங்கம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி தவிசாளர் தெரிவின்போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சினைச் சேர்ந்த முகமட் தாகீரின் பெயரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றினால் எம்.சந்திரபாலவின் பெயரும் முன்மொழியப்பட்டன.

வாக்கெடுப்பின்போது 10 மேலதிக வாக்குகளைப்பெற்ற எம்.சந்திரபால பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.