சிறைக்கைதி ஆனந்தசுதாகரனை ஒருமாதத்திற்குள் விடுதலை செய்து பிள்ளைகளுடன் இணைக்குமாறு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அனுஸ்டிப்பு.

(-க.விஜயரெத்தினம்)
சிறைக்கைதி ஆனந்தசுதாகரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமெடுத்து ஒருமாதத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு அவரது பிள்ளைகளுடன் இணைக்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துவேன் என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவியும்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமாதி.செல்வி மனோகர் தெரிவித்தார்.





அன்னை பூபதியின் நினைவு நாளில் தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளீர் அணித்தலைவி திருமதி.செல்வி மனோகர் தலைமையில் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் இன்று(19.4.2018)இடம்பெற்றது.

நேற்றையதினம்  போராட்டத்திற்கும்,அடையாள உண்ணாவிரதம் அனுஸ்டிக்குமாறும் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கட்சியின் மகளீர் உறுப்பினர்கள்,பெண்கள் கலந்துகொண்டார்கள்.

 வியாழக்கிழமை(19.4.2018) காலை 8.00மணி தொடக்கம் காந்திபூங்காவில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் குறிப்பிடுகையில்:-  .

தமது தாயை இழந்து பரிதவித்து அநாதரவான நிலையில் நிற்கும் பிள்ளைகளுக்கு துணையாக இருக்கவேண்டிய தந்தை சிறையில் வாடிக்கொண்டுள்ளார்.இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளும்  நாளாந்தம் தனது தந்தையின் சிந்தனையோடு எதிர்காலம் இன்றியும், கதியற்ற நிலையில் உள்ளனர்.

ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி கடந்த காலத்தில் வடகிழக்கில் கையெழுத்துபோராட்டம் நடாத்தப்பட்டு ஜனாதிபதியிடம் நேரடியாக கையளிக்கப்பட்டிருந்தது.

ஆனந்த சுதாகரன் புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார் என ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளும் தமிழ் மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.ஆனால் இதுவரையும் விடுதலை செய்யப்படவில்லை.வடகிழக்கு தமிழ்மக்கள் பெரும் ஏமாற்றத்தோடுதான்  காத்திருக்கின்றார்கள்.சிறுபான்மை மக்களை நேசிக்கும் ஜனாதிபதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் நேசிக்கும் தலைவனாக மிளிர்ந்திருப்பார்.

ஆனால் ஆனந்தசுதாகரனின் விடுதலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,எதிர்கட்சி தலைவார் இரா.சம்பந்தன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கவலைக்குரிய விடயமாகும்.ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் கோரிக்கையினை உதாசீனம் செய்யும் வகையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கம் செயற்படுகின்றன.

இந்த நிலையில் ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மீண்டும் போராட்டங்களை நடாத்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் ,விடுதலைக்காகவும் தனது உயிர் பிரியும் வரையில் போராட்டம் நடாத்தி தமிழ் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் அன்னை பூபதியின் நினைவு தினத்தில் ஆனந்தசுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை நாங்கள் ஒழுங்கு செய்துள்ளோம் .

இந்த போராட்டம் இந்த அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கண்களை திறக்கவைத்து சகோதரர் ஆனந்தசுதாகரனை ஒருமாதற்குள் விடுதலை செய்து அவரது பிள்ளைகளுடன் இணைக்கப்படவேண்டும். அவ்வாறு விடுதலை செய்யப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களையும் ஒன்றிணைத்து மாவட்ட ரீதியாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அரசியல் கட்சிகள் பேதங்களை மறந்து ஆனந்தசுதாகரனை விடுதலை செய்வதற்கு எங்களோடு ஒன்றிணையுங்கள் எனத்தெரிவித்தார்.