ஜனாதிபதியால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக தமிழர் ஒருவர் நியமனம்


அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரச கரும மொழிகள் ஆணைக்குழு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. அரசியல் யாப்பிலுள்ள அரச கரும மொழிகள் தொடர்பான ஏற்பாடுகள் முறையாக அமுலாக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்வதும், அரச நிறுவனங்களில் மொழி பயன்பாட்டை சீராக்குவதும் இவை தொடர்பான கொள்கைகளை விதந்துரைந்து கண்காணிப்பதும் ஆணைக்குழுவின் பொறுப்புக்களாகும்.

பதுளையை பிறப்பிடமாகக்கொண்டு தற்போது கொழும்பில் வசித்துவரும் பேராசிரியர் சோ .சந்திரசேகரம் கல்வியியல்துறையில் பேராதனை பல்கலைக்கழக, ஹிரோஷிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரி, கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல்துறை முன்னாள் பீடாதிபதி, தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவர் மற்றும் கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

சமூக பிரஜைகளுடன் செயற்பட்டு தமது எழுத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் மூலம் சமூக மேம்பாட்டுக்காக பாடுபடுபவர் .இவர் தமிழ், ஆங்கில, சிங்கள மொழி புலமைகள் கொண்டவர் என்பதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.