40 அடி உயர வழுக்குமரத்திலிருந்து கைதவறி வீழ்ந்த வீரர்! காரைதீவு புத்தாண்டுவிழாவில் சம்பவம்



(காரைதீவு நிருபர் சகா)


விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15) நடாத்திய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராதவகையில் தரையில்வீழந்து துடிதுடித்தார்.


இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று(15) நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு கலாசார விளையாட்டுவிழாவில் இடம்பெற்றது.


சுமார் 40அடி உயரமான வழுக்குமரத்தில் தனது கோஸ்ட்டியுடன் ஏறிய சாமித்தம்பி தவராசா(வயது 40) என்பவரே இவ்விதம் பரிதாபகரமாக மல்லாக்க வீழந்தார்.
இடுப்பு தரையில் அடிபடவீழ்ந்ததால் பலத்த என்புமுறிவுகள் ஏற்பட்டிருந்தது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
விளையாட்டு மைதானத்தில் ஒரே நேரத்தில் பல வகையான கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக குதூகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.


விளையாட்டுவிழா ஆரம்பமான 3.30மணிமுதல் வழுக்குமரம் ஏறும் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தது.


4.30மணியளவில் மைதானத்தில் கிடுகிழைத்தல் தலையணைச்சமர் மற்றும் கல்விச்சாதனையாளர் பாராட்டுவிழா நிகழ்வும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
அச்சமயம் இத்துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேடையிலிருந்த அதிதிகள் அவர் மல்லாக்க வீழ்வதை நேரடியாகக்கண்டிருக்கின்றனர்.


வழுக்குமரத்தைச்சுற்றி பூசியிருந்த கிறீசை வழித்துவழித்து மேல்நோக்கி ஏறிக்கொண்டிருந்தனர். சுமார் 30அடி உயரத்தில் முதலாவதாக தவராசா முன்னேறிக்கொண்டிருந்தார். அப்போது மேலிருந்த கிறீசை வழித்துவிட்டு தான்கட்டிய கயிற்றை பிடித்தபோது கயிறு திடிரென எதிர்பாராதவகையில் அறுந்ததனால் நிலைதடுமாறி கை தவற அவர் மல்லாக்க கீழ்நோக்கழ வீழ்ந்தார். அப்போது கீழே நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் நின்றிருநதனர். அவர்கள் விலக இவர் நேராக தரையிலே வீழந்திருக்கிறார்.


வீழந்தவுடன் துடிதுடித்தார். அங்கு சனம்கூடியது. அதனைப்பார்த்துக்கொண்டிருந்த காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கிரு. ஜெயசிறில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குக் கொண்டுசென்றார்.


அங்கு அதிதீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விரைந்து வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் திவீரமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் உயிருக்கு ஆபத்தில்லை என தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்தார்.


கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கேட்டபோது:


குறித்த வீரரை ஸ்கன்செய்த வைத்திய அதிகாரிகள் உயரத்திலிருந்து வீழ்ந்ததனால் இடதுகால் தொடை எலும்பு முற்றாக உடைந்த அதேவேளை ஏனைய என்புகளும் சிறுசிறு உடைவுகள் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டனர்.


பல்முறிவுகள் என்பில் ஏற்பட்டகாரணத்தினால் அவரை என்புவைத்தியநிபுணர் உள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைத்தோம். அங்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
தலையில் அடிபடவில்லை. இடுப்பும் அதுசார்ந்த பகுதிகளும் இந்த உன்புமுறிவுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவே உயிருக்கு ஆபத்தில்லை என்றார்.