மட்டக்களப்பு கோரவெளியில் சோகம்! காதலி கர்ப்பமான நிலையில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!


ஒரே கயிற்றில் தொங்கிய நிலையில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் சடலங்களை நேற்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

திகிலிவெட்டை எனும் வயல்வெளிக் கிராமத்தின் முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த தங்கவடிவேல் தினேஷ்குமார் (வயது 22), மற்றும் நூலகர் வீதியைச் சேர்ந்த நாகராஜா நிரோஜினி (வயது 23) ஆகிய இருவரினதும் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கோராவெளி – நாவலடி ஊற்று பகுதியில் நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிளொன்று அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்ததை நோட்டமிட்ட ஆடு மேய்க்கும் பெண்ணொருவர், அப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அங்கு வந்த எவராவது காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரதேச சபை உறுப்பினருக்கு அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பிரதேச சபை உறுப்பினரும் கிராமவாசிகளும் ஆடு மேய்க்கும் பெண்ணுமாக இணைந்து பற்றைக் காடுகள் அடர்ந்த பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது குறித்த காதல் ஜோடி மரமொன்றில் ஒரே கயிற்றில் சடலமாகத் தொங்கியபடி காணப்பட்டுள்ளனர்.

குறித்த சடலங்கள் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரதேச மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளை மேற்கொண்டபின்னர் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.

காதலர்களான இவ்விருவரும் இரகசிய தொடர்புகளைப் பேணி வந்துள்ள அதேவேளை காதலி 5 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும், இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான பெற்றோரின் அங்கீகாரம் உடனடியாகக் கிடைக்கப் பெறாத நிலையில், விரக்தியுற்று தங்களை மாய்த்துக் கொண்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.