அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்கின்றனர்!


முள்ளிவாய்க்கால் நிகழ்வை வெறுமனே அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக வருடா வருடம் செய்கின்றனர் என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.ஜோன்சன் தெரிவித்தார்.

மே 18 படுகொலை நினைவேந்தல் தொடர்பாக வாகரை பாலச்சேனையில் நேற்றையதினம்(14-05-2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.........

முள்ளிவாய்க்கால் நிகழ்வை வெறுமனே அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக வருடா வருடம் பண்டிகைகள் போன்று மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக செய்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வொன்றே எங்களுக்கு எதிர்காலத்தில் சர்வதேசத்தையும், இலங்கை அரசையும் எங்கள் பக்கம் இழுப்பதற்கான ஒரு முக்கிய நிகழ்வாக நாங்கள் கருதுகின்றோம்.

எனவே எதிர்காலத்தில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகளும் இதனை அரசியல் நிகழ்வாக பயன்படுத்தி அரசியல் இருப்பை தக்க வைப்பதை இடைநிறுத்துமாறும், நிகழ்வை வரலாற்று ஆவணப்படுத்தப்பட்டதாக கொண்டு செல்வதற்கு முன்வரவேண்டும் என்று அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால் கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வாகரை நாகபுரத்தில் தமிழனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
21ம் நூற்றாண்டில் தமிழினத்தின் மீது உலக நாடுகளின் மேற்பார்வையில் நடாத்தப்பட்ட மிக மிக கேவலமானதும், கொடூரமான இனப்படுகொலை நினைவேந்தலை முள்ளிவாய்க்காலில் மட்டும் சுருக்கி விடாமல் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் நினைவு கூறுவதே சாலச்சிறந்ததாகும்.

இதேவேளை யாழ் பல்கலைக் கழக சமூகத்துடன் இணைந்து அனைத்து சிவில் அமைப்புக்களும் மற்றும் தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி இந்நினைவேந்தல் நிகழ்வை காத்திரமாகச் செய்யுமாறும், எந்தவொரு அரசியல் தலையீட்டைத் தவிர்க்குமாறும் வினையமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு கிழக்கில் எம்முடன் இணைந்து கிழக்குப் பல்கலைக் கழகச் சமூகம், கிழக்கு மாணவர்கள் ஒன்றியம், கிறிஸ்தவ மதகுருமார்கள், இந்து மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு இந்நினைவேந்தலை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தாா்.