மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்கள் விபத்து! பெண்கள் குடிபோதைக்கான முதலாவது வழக்கு தாக்கல்!


மதுபோதையில் உந்துருளியில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.இருபாலைச் சந்திப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக உந்துருளியில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரும் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து இன்று வெளியேறியதுடன் அவர்களில் உந்துருளியைச் செலுத்தி வந்த பெண், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்களும் 23,24 வயதுகளையுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேரந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.