காப்பாற்ற சென்ற பொலிஸ் அதிகாரியும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்!


வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களைக் காப்பாற்றச் சென்ற, மாதபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி, நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரியுல்ல பிரதேசத்தினைச் சேர்ந்த 29 வயதான டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளார்.

கடும் வெள்ளப் பெருக்குக் காரணமாக வெளியேற முடியாது தவித்த மக்களை மீட்பதற்காக கல்கமுவ-உடலவெல கால்வாய்க்கு அப்பால் செல்வதற்கு முயன்ற போதே, நீரலையில் சிக்கிக் காணாமல் போய்யுள்ளார்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரைத் தேடும் பணிகளில், கடற்படையினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.