கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா


கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஷேட பொது பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா மண்டபத்தில் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சௌக்கிய பராமரிப்ப விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்து கற்கைகள் பிரிவு, பிரயோக விஞ்ஞான பீடம், விவசாய பீடம், கலை கலாசார பீடம், வணிக முகாமைத்துவ பீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், சுவாமி விபுலானந்தா அழிகியற் கற்கை நிறுவகம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த 376 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

முதலாவது அமர்வில் 128 பேருக்கும் இரண்டாவது அமர்வில் 131 பேருக்கும் முன்றாவது அமர்வில் 117 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

இதில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமா 21 பேரும், வைத்திய துறையில் 50 பேரும், விஞ்ஞானப் பிரிவில் 35 பேரும், விஞ்ஞான முகாமைத்துவ பிரிவில் 54பேரும், கலை மற்றும் தொடர்பாடல் பிரிவில் 6 பேரும், கலைப் பிரிவில் 5 பேரும், சுவாமி விபுலானந்தா அழிகியற் கற்கை நிறுவகத்தில் நடனம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும் மற்றும் கட்புலத்துறைகளில் பட்டப் படிப்பினை மேற்கொண்ட 131 பேரும் பட்டம் பெற்றனர்.

திருகோணமலை வளாகத்தில் சித்த வைத்தியம் பயின்ற 12 பேரும் தாதியர் பிரிவில் ஒருவரும், விவசாய விஞ்ஞான பிரிவில் 38 பேரும், வணிக முகாமைத்துவ பிரிவில் 5 பேரும், வர்த்தப் பிரிவில் 4 பேரும், வணிக முகாமைத்துவ வெளிவாரியாக 12 பேரும் விஞ்ஞானப் பிரிவு வெளிவாரியாக இருவரும் பட்டம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.