துப்பாக்கியுடன் மாயமான மட்டக்களப்பை சேர்ந்தவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

திருகோணமலை கப்பல்துறை விமானப்படை முகாமில் கடமையிலிருந்த வேளை ரீ 56 துப்பாக்கி மற்றும் 90 ரவைகளுடன் தலைமறைவாகிய விமானப்படை வீரரை அடுத்த மாதம் யூன் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று(29) உத்தரவிட்டார்.


மட்டக்களப்பு, முருகன் கோவிலடி வீதி, திராய்மடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல்துறை விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த விமானப்படை உறுப்பினர், ரீ ஜம்பத்தாறு துப்பாக்கி மற்றும் அதற்கான மகசீன், 90 ரவைகளுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 28ம் திகதி தலைமறைவாகினார். இந்த நிலையில் அவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரான விமானப்படை வீரரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.