12 வயது சிறுமியை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்த 65 வயது முதியவர்!


12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு குறித்த சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 65 வயது நிரம்பிய முதியவரே இவ்வாறு காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தமையை அவதானித்த வர்த்தகர்கள் நேற்றைய தினம் காணொளி ஆதாரத்துடன் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே குறித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச வர்த்தகர்களால் கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி வறிய குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், வறுமையை சாதகமாக பயன்படுத்தி குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை முறிகண்டியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் சிறுவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பலமுறை சிறுவர் பாதுகாப்பு தரப்பினருக்கு எடுத்து கூறியுள்ள போதிலும், பெற்றோருக்கு துணையாக வர்த்தக நடவடிக்கையில் சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்த முடியாத நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

நாளைய சிறந்த தலைமுறையை உருவாக்குவதற்கு இன்றைய சிறார்களை பாதுகாக்கும் வகையில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்