பல்கலையில் மாணவிகள் முன்னால் அரை நிர்வாணப்படும் அச்சத்தில் 25 பேர் மொட்டை அடித்த சம்பவம் ! பகிடிவதையின் உச்சம் !

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த ஒருதொகுதி மாணவர்கள், வவுனியாவில் மொட்டை அடித்த சம்பவம் ஒன்று இன்று(21) இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடி வதைக் கொடுமை நிமித்தமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.

வவுனியா குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிலேயே குறிப்பிட்ட 25 மாணவர்களும் மொட்டையடிக்க சென்றுள்ளனர்.

சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் குறித்த மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும், மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் கனிஸ்ட மாணவிகளின் முன்னால் அரை நிர்வாணமாக நிறுத்தி சிரேஸ்ட மாணவர்கள் அடிப்பார்கள் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் மனிதாபிமான அடிப்படையில் 50 ரூபாவிற்கு மொட்டையடித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வவுனியா வளாகத்தின் சிரேஸ்ட மாணவர்கள் 'ராக்கிங்' என்ற பெயரில் மனித உரிமை மீறல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகம் வரும் கனிஸ்ட மாணவர்களை 'ராக்கிங' என்ற பெயரில் துன்புறுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் மீது வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.