வாழைச்சேனையில் ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் !! 4 பேர் வைத்தியசாலையில் !!


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெற்று வரும் உற்சவ விழா வழிபாட்டில் கலந்து கொள்ள சென்ற இளைஞர்கள் மேல் குறித்த ஆலயத்தில் கூடியிருந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் நான்கு பேர்கள் காயமடைந்ததாகவும் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
சண்டைச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை ஆலய முன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த ஆலய முன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்சக்கர வண்டியின் உள்ளே இருந்த பணம் காணமல் போயுள்ளதாக தெரிவித்து அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இச்சம்பவத்தினை கேள்வியுற்ற பெற்றோர்கள் மற்றும் கருங்காலிச்சோலை கிராம மக்கள் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறும் வலியுறித்தி கலகத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற கலகத்தினை கட்டுப்படுத்தி வழமையான சூழ் நிலைக்கு கொண்டு வரும் முகமாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் கலகத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்ததையினை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை மேற்கொள்வதுடன் குற்றவாழிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கலகத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு கலைந்து சென்றனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மே;ற்கொண்டு வருகின்னர்.