இனங்காணப்பட்ட 80 சமுக வலைத்தளங்கள் மீதான சட்ட நடவடிக்கை விரைவில் !


நாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் அரசாங்கத்தால் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவற்றில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை எனவும், எஞ்சிய 40 உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவை தொடர்பில் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சிகளினாலேயே இவை முன்னெடுத்துச் செல்லப்படுவதாக குற்றம் சுமத்தினார்.

மேலும், இந்த சமூக வலைத்தளங்களை இயக்குவதற்கு இளைஞர்கள் குழுவொன்று பயன்படுத்தப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.