(கனகராசா சரவணன்)
குடும்ப பிரச்சனை தொடர்பாக விசாரணைக்குச் சென்ற பொலிசார் மீது கத்தியால் வெட்டி தாக்குதலில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கத்தியால் வெட்டி தாக்குதல் நடாத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை ( 05) மாலை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
காத்தான்குடி 6 ம் பிரிவு ஹாஜியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான இன்று பிற்பகல் 2 மணியளவில் நபர் ஒருவர் அவரது தாய் சகோதரியை தாக்குவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று அந்த நபரை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிவரமுயற்சித்தபோது அவர் பொலிசார் மீது கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டபோது பொலிஸ் சாஜன் மகேந்திரன், பொலிஸ் கான்ஸ்டபிள் ஜேம்ஸ் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய 38 வயதுடையவரை பொலிசார் கைது செய்துள்ளனர் .
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்