சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு



(சிவம்)                                                           

மட்டக்களப்பு மாநகர சபையினால் கைத்தொழிற்சாலைகளுக்கு சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (20) நடைபெற்றது.

1533/16 ஆம் இலக்க 2008 ஆம் ஆண்டிற்கான வர்த்தமானி அறிவுறுத்தலுக்கிணங்க கைத்தொழிற்சாலைகளின்; செயற்பாடுகளுக்கு ஏற்ப 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு  சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படுகின்றன. முதல் இரு பிரிவுகளுக்கும் உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட சுற்றாடல் அதிகார சபைக்கும் மூன்றாவது பிரிவு மட்டக்களப்பு மாநகர சபைக்கும் வழங்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கைக்கு இணங்க மாநகர சபையானது 3 வருடங்களுக்கு குறித்த உரிமத்தை தொடராக வழங்குகின்றது.

மட்டக்களப்பு மாநகர 7 ஆவது சபையின் 4 ஆவது அமர்வு கடந்த 31.05.2018 நடைபெற்றபோது பொது மக்கள் நெருக்கமாக வாழும் நகர்ப்புறங்களில் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு கைத்தொழிற்சாலைகளுக்கான சூழல் பாதுகாப்பு உரிமம் 3 வருடங்களுக்கு தொடராக வழங்காமல் ஒவ்வொரு வருடமும் பொதுச் சுகாதார பரிசோதகரின் கள அறிக்கையினைப் பரிசீலனை செய்து உரிமம் வழங்கப்பட வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தனிநபர் பிரேரணையைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு பிரதேச சுற்றாடல் அதிகாரி கே. லோகராஜா பொதுச் சுகாதார பரிசோதகரின் கள அறிக்கை 3 மாத கால இடைவேளைகளில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு தகுதியான தொழிற்சாலைக்கு மட்டும் உரிமம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முகம் கொடுக்கும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.