நாட்டின் எதிர்கால தலைவராக சஜித் பிரேமதாச: தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்


நாட்டின் எதிர்கால ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும், நாட்டின் தலைவராகவும் சஜித் பிரேமதாச அவர்கள் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு -வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 75ஆவது மாதிரிக் கிராமமான முல்லை நகர் வீடமைப்புத்திட்ட திறப்பு விழா நேற்று (04.06.2018) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பட்டார்.



தொடர்ந்து தெரிவிக்கையில், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாசவினால் அமைக்கப்பட்ட சில வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.  இவ்வாறு காணப்படும் பல நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை  திருத்தி புனரமைப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.  அத்தோடு  ஒரு  இலட்சம் பெறுமதியான வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த வீடுகள் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகின்றன. எனவே இந்தவகையான வீடுகளையும், அமைச்சர் முடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என இந்த இடத்தில் கேட்டுகொள்கின்றேன்.

மேலும், இன, மத பேதங்களுக்கு அப்பால் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.  நாட்டின் சிறந்த தலைவராக நீங்கள் வரவேண்டும் என வாழ்த்துகின்றேன் என்றார்.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.உதயகுமார்,  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.