காத்தான்குடி மதவாத துப்பாக்கி சூடு! கிழக்கு அமைச்சர் ஒருவர் ஆயுத விநியோகம்? - புலனாய்வுத்துறை விசாரணை வேண்டும்


காத்தான்குடி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு  மாற்றி விசாரணைகளை  நடாத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்து  கடிதம் ஒன்றை நேற்று திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ளதாக இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பத்தை பார்க்கும்போது இந்த நாட்டில் சந்தேகத்திற்கிடமான மதவாதக் குழுக்கள் மறைமுகமாக இயங்கக்கூடும் எனும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது

கடந்த காலங்களில் இந்து சம்மேளனம் தொடர்ச்சியாக பொலிஸ் திணைக்களத்திற்கு இவ்விடயம் தொடர்பாக விழிப்போடு இருக்குமாறு  கோரிவந்துள்ளது.

எனினும் உரிய அதிகாரிகள் இதுதொடர்பாக எவ்வித அக்கரையும் செலுத்தாத காரணத்தினால் தற்போது மதவாத ஆயுதக்குழுக்கள் பகிரங்கமாக  வாகனத்தில் வந்து சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர

இச்சம்பவங்கள் மீண்டும் இலங்கையையும் இலங்கை மக்களையும் ஒரு இருண்ட யுகத்திற்கு இழுத்துச்சென்று விடுமோ என்ற அச்ச உணர்வு தற்போது ஒவ்வொரு குடிமகனின்  மனதிலும் ஏற்பட்டுள்ளது. எது எவ்வாறெனினும் குறிப்பிட்ட மதவாத ஆயுதக் குழுக்களுக்கு  ஆயுதம் எவ்வாறு கிடைத்தது?'

ஆயுதங்களை  பாதுகாப்பு அமைச்சினூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டு தன்னால் தான் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்பட்டது' என்று கிழக்கின் ராஜாங்க அமைச்சர் ஒருவர் முன்னர் கூறியிருந்தது தொடர்பாகவும்
யுத்தம் முடிவடைந்த பின் அவ்வாயுதங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் புலனாய்வு செய்யுமாறும் இந்து சம்மேளனம் அரசாங்கத்தை தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றது

எனினும் இது தொடர்பாக எந்தவிதமான நகர்வுகளையும்  அரசாங்கம் எடுக்காததன் விளைவு இன்று பாரதூரமான திசையை நோக்கி கிழக்கு மாகாணம் நகர்கின்றதாகத் தோன்றுகின்றது.

எனவே இவ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு  மாற்றி விசாரணைகளை  நடாத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இந்து சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கின்றது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது