ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு நேற்று முற்பகல் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி முன்னிலையில் உரையாற்றிய போதே வட மாகாண முதலமைச்சர் வி்க்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
வடபகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் விளைவாக பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தாய் தந்தையர்களை இழந்து, உறவுகளை இழந்து, குழந்தைகள் காப்பகங்களிலும் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கின்ற நல்ல உள்ள படைத்தவர்களின் தனிப்பட்ட இடங்களிலும், செஞ்சோலை போன்ற அமைப்புக்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இக் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இக்குழந்தைகள் பற்றி சிந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டதையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன்.
யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஏற்ற உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்.
போரில் பாதிக்கப்பட்டு பல வித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறம் தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது. அதுவும் சமய ரீதியிலான பண்பான குடும்ப வாழ்க்கையை வாழும் உங்களைப் போன்றவர்கள் முன்னைய போராளிகளை அவர்கள் இயக்கப் பெயர் கொண்டு புறந்தள்ளி வைப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அமைச்சர் சுவாமிநாதனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையிட்டு நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைந்தோம்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சுயாட்சி வழங்க நீங்கள் முன்வர வேண்டும் அது அரசியல் ரீதியாக உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குங்கள் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.