மோசடிகளற்ற அரசியல் தலைமைகளை உருவாக்க மக்களும் ஊடகங்களும் முன்வர வேண்டும் - ஸ்ரீநேசன்



(மயூ ஆமலை)
நாட்டிலும், மாவட்டங்களிலும் ஊழல், மோசடிகளற்ற அரசியல் தலைமைகளை உருவாக்க மக்களும், ஊடகங்களும் உழைக்க வேண்டும். ஊழல்கள், மோசடிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கின்ற வேடதாரிகள் யார்? என்பதை மக்களும் ஊடகங்களும் இனங்கண்டு அவர்களை வெளிக்கொணர வேண்டும் மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களின் முகமூடிகள் களையப்பட வேண்டும்.

மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட திராய்மடுக் கிராமத்திலுள்ள நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் பத்தாண்டு நிறைவு விழா அப்பாடசாலை அதிபர் திரு.குணசீலன் தலைமையில் 29.06.2018 அன்று நடைபெற்றது.

அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் ஆடல், பாடல், நாடகம், உரைகள் என்று பலகலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. சிறுவர்களின் ஆற்றல்கள், திறன்கள் நிகழ்ச்சிகள் மூலம் வெளிக்கொணரப்பட்டிருந்தன. இதனை வெளிக்கொணர்ந்த ஆசிரியர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பாராட்டினார்.

மேலும் கணிதப்பாடத்தினூடாக பாடசாலை அடைவு மட்டத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவித்தார். அதிபரின் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி மேலோங்க தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்து . மாணவர்களின் மனங்களில் என்றும் மறக்க முடியாத ஆசான்களாக திகழ வேண்டும் எனவும் தெரிவித்தார். கற்றலைக் கற்போர்க்குக் கரும்பாக்க வல்ல கற்றல் வழி தெரிந்தவனே ஆசான்  என்கின்ற ஆசிரியர் பற்றிய தனது சிறு குறளையும் விளக்கி பேசியிருந்தார்.

இந்நிகழ்வில் மேலும் சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார், வணபிதா போல் சற்குணநாயகம் அடிகளார், உதவிக்கல்வி பணிப்பாளர் திரு யுவராஜன், பிற பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.