ஏறாவூரில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை!


(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
நோன்புப் பெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில்   இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து  களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத்  தடைவிதிக்க   ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில்    தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும்  மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும்        ஆண்களை மாத்திரம் அனுமதிப்பதாகவும் மூன்றாம் நான்காம் நாட்களில் பெண்களை மாத்திரம் அனுமதிப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தலைமையில் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் பெருநாள் நிகழ்வுகளையொட்டி  ஆற்றங்கரையோர வீதிகளில் வாகன போக்குவரத்து   முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கும்.    பொதுமக்களது பாதுகாப்பிற்காக தேவையான ஆண், பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தொழுகை நேரங்களில் ஒலி பெருக்கி நிறுத்தப்படும். சிறுவர்கள் வருகை தருவதற்கு  எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் ஜம்இய்யத்து உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படாததினால் உள்ளுராட்சி மன்றம் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியதைக் கருத்திற்கொண்டு இம்முறை கட்டுப்பாடுகளை கடுமையாக விதிக்க சபை முடிவுசெய்துள்ளது.

உப தவிசாளர் எம்எல் ரெபுபாசம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான எம் எஸ். சுபைர் (மக்காவுக்குப் பயணம்), எம் எஸ். நழீம்,ஏ.எஸ்.எம். றியாழ், ஆரிபா கமால் மௌலானா ஆகியோர் இக்கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லை.