2020ஆம் ஆண்டளவில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் திட்டம்

நாடளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டளவில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

என்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பற்றி அரச வங்கிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இந்த திட்டத்திற்காக 16 வகையிலான உத்தேச கடன் திட்டங்கள் வடிமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிலஹரித என்ற பசுமை பொருளாதாரம் தொனிப்பொருளில் அரசாங்கம் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது என்று சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்பதை விட தொழில் முயற்சியாளர்களை கொண்ட நாடாக இலங்கையை கருத முடியும் என்றும் தெரிவித்தார்.


சகல இலங்கையர்களுக்கும் இதன் பங்குதாரர்களாக இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஆறு சதவீதமான தொகை கல்விக்காக ஒதுக்கப்படுவது அவசியமாகும். இந்த இலக்கை 2020ம் ஆண்டளவில் அடைந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழங்களுக்கு சென்றவர்கள் மாத்திரமன்றி உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய தொழில் முயற்சியாளர்களையும் இனங்காண்பது அவசியமாகும். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

 இந்த வேலைத்திட்டத்திற்காக ஐயாயிரத்து 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் ஊடாக அமுல்படுத்தப்படும் 100 இற்கும் அதிகமான கடன் திட்டங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன. என்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் என்ற பெயரில் சகல வங்கிகளிலும் விசேட கருமபீடம் ஸ்தாபிக்கப்படுவது அவசியமாகும். மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி என்பன இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.