தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ,உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு !


கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி செம்டெம்பர் முதலாம் திகதி பரீட்சைகள் நிறைவடையவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்,

இம் முறை நாடளாவிய ரீதியில் மொத்தமாக 2 இலட்சத்து 44, 146 பாடாசாலை மூலமான பரீட்சாத்திகளும், 77 ஆயிரத்து 323 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைகளை நடத்துவதற்காக 2, 268 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சாத்திகளின் பரீட்சை அனுமதிப்பத்திரம் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கும் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படும்.

இதே வேளை இவ்வாண்டு தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 3 இலட்சத்து 55, 321 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர். இவர்களில் 87 ஆயிரத்து 556 தமிழ் மொழி மூல பரீட்சாத்திகளும் 2 இலட்சத்து 67, 765 சிங்கள மூலமான பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றனர்.