வாழைச்சேனையில் சகோதரியைத் தாக்கிவிட்டு சகோதரன் தற்கொலை !


கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன் என்பவரே நேற்று புதன் கிழமை (18) மாலை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கண்ணகிபுரத்தினை சேர்ந்த குறித்த நபர் நேற்று முன்தினம் மாலை பேத்தாழையிலுள்ள தமது உடன் பிறவா சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையிலேயே சகோதரியின் வீட்டுக் கூரையில் அங்கிருந்த படுக்கை விரிப்பினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதேவேளை சகோதரியினை கத்தியினால் வெட்டி காயத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் தமது துவிச்சக்கர வண்டியினையும் கையில் வைத்திருந்த கத்தியினால் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கல்குடா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.