மக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சிச் செயலமர்வு

(சிவம்)

வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கோடு அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மண்றத் தேர்தலில் வட்டாரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற, பட்டியல் மூலம் தெரிவான மற்றும் தொங்கும் நிலை முறையில் தெரிவான உறுப்பினர்களுக்கான விசேட முழுநாள் செயலமர்வு நேற்று (09) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயம் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளணியும் பயிற்சி அலுவலகம் மற்றும் உள்ளுராட்சி மண்றத்துடன் இணைந்து நடாத்திய செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் கலந்து கொண்டு இலங்கையின் உள்ளுராட்சி முறை, உள்ளுராட்சி நிறுவனங்களில் சபைக் கூட்டங்களை நடாத்துதல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் எனும் தலைப்புகளில்   தெளிவுபடுத்தினார்.
கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி அலுவலக பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டவர்கள் பயன்பெற்றதோடு அவாகளின் கேழ்விகளுக்கு வளவாளர் பதிலளித்தார். 

இதன்போது உள்ளுர் அபிவிருத்திக்கு நல்லாட்சி எனும் தலைப்பில் பயிற்சிக் கையேடு, பாராளுமன்றத்தினால் திருத்தப்பட்ட மாநகரசபை கட்டளைச் சட்டங்கள் கையேடு என்பன கலந்து கொண்டவாகளுக்கு வழங்கப்பட்டன.

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களுக்கான குறித்த பயிற்சிச் செயலமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) அக்கரைப்பற்று மாநகர சபையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழில்துறை அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அசீஸ், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். சித்திரவேல் மற்றும் மட்டக்களப்பு மாநகர செயலாளர் எம்.ஆர்;. சியாஹூல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டனர்.