பாலர்சேனையில் பாடசாலை அடிக்கல் நாட்டும் நிகழ்வு



வேப்பவெட்டுவான் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய குக்கிராமமான பாலர்சேனை கிராமத்தில் தற்போது இயங்கி வரும்  கலாசூரி வினாயகமூர்த்தி வித்தியாலயத்திற்கான புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கல்லினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   வியாழேந்திரன் 11.07.2018 அன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இக்கிராமத்தில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை வேப்பவெட்டுவான் பாடசாலைக்கும் இலுப்படிச்சேனையில் உள்ள அம்பாள் மகா வித்தியாலயத்திற்குமே தங்கள் பிள்ளைகளை அனுப்பி கல்வி கற்றலை தொடர்ந்த போதும் பல தொலை தூரம்; இப்பிள்ளைகளை அனுப்ப வேண்டிய ஒரு கட்டாயத்தின் மத்தியில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்;

2016ம் ஆண்டு ஒரு ஓலை கொட்கையிலேயே இப்பாடசாலை ஆரம்ப பாடசாலையாக 13 பிள்ளகைளுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 56 மாணவர்களுடன் கல்வி நடவடிக்கையை மேற் கொண்டு வருகின்றது 2017ம் ஆண்டில் இருந்து 5ம் தரத்தினை ஆரம்பித்து இவ்வாண்டு 5ம்தர புலமை பரீட்சைக்கும் மாணவர்களை தயார் படுத்துவதாக இப்பாடசாலையின் அதிபர் சி.துரைராஜா தெரிவிக்கின்றார்.

இப்பாடசாலைக்கு 2017ம் ஆண்டு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.வியாழேந்திரன் அவர்களின் நிதியின் மூலம் ஒரு கட்டிடம் அமைத்துக் கொடுத்தாலும் தற்போதும் மாணவர்கள் தகரக் கொட்டில்களிலும் மரங்களின் கீழுமே கல்வி கற்று வருவதாகவும் கூறுகின்றார். தானும் இன்னுமொரு ஆசிரியருமே கல்வி நடவடிக்ககையில் ஈடுபடுவதாகவும் இரண்டு ஆசிரியர்கள் தொண்டர் அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

இப்பாடசாலையின் கட்டிட தேவையை  கருத்தில் கொண்டே இக்கட்டிடம் அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வியாழேந்திரன் அவர்கள்  உரையாற்றுகையில் இங்கு வாழும் மக்கள் மிக வறுமையான மக்களாக காணப்படுகின்றார்கள் இவர்கள் தங்கள் பிள்ளைகளை இக்கிராமத்திலேயே கல்வி கற்பதற்கு இப்பாடசாலை உதவுவதாக காணப்படுகின்றது.

தற்போதைய காலத்தில் கல்வி தான் மிக முக்கியமாக வேண்டும் வருங்கால சந்ததியினரான இவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் வேப்பவெட்டுவான் கிராமத்தில் தான் கல்வி கற்றவன் ஆகவே இவர்களது நிலை எனக்கு தெரியும் என கூறினார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.முருகேசப்பிள்ளை அவர்களும் ஏறாவூர் பற்று மேற்கு உடற்கல்வி உதவிப்பணிப்பாளரும் பாடசாலை இணைப்பாளருமான திரு.சந்திரகுமார் அவர்களும் வேப்பவெட்டுவான் சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் சமுர்த்தி பயனுகரிகளும் கலந்து கொண்டனர்