புதைக்கப்பட்ட நிலையில் ஹெரொயின் மீட்பு


திருகோணமலை - சேருநுவர - சீனன்வெளி கடற்பரப்பில் 1.7 கோடி ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, 5 பொதிகளில் பொதி செய்யப்பட்டு கடற்கரையோரத்தில் இருந்து குறித்த ஹெரோயின் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 1.41 கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் போதை பொருளானது, கடந்த வெள்ளிக்கிழமை சம்பூர் இலக்கந்த பகுதியில் மீட்கப்பட்ட போதை பொருளின் ஒருதொகையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, இலக்கந்த பகுதியில் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 5.5 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.