வாகரையில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்பு !!


(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)
வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னத்தட்டுமுனை களப்பு பகுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் (10.07.2018 ) மீனவர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தார்கள்.

வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா கயிலைநாதன் (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று திங்கட்கிழமை மாலை சின்னத்தட்டுமுனை களப்பப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்களும் சக மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதன்போது சடலம் களப்பு நீருக்குள் கிடப்பது தெரிய வந்ததையடுத்து சடலத்தை மீனவர்களின் உதவியுடன் மீட்டெடுத்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இம்மீனவர் வலைவீசிக் கொண்டிருந்தவாறே மாரடைப்புக் காரணமாக களப்பு நீருக்குள் வீழ்ந்து மரணித்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றார்கள். இச்சம்பவம்பற்றி வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.