சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் தூக்குத் தண்டனை: தலதா அத்துக்கோரள


சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.

பெல்மதுளை கணேகம ரஜமஹா விகாரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசாங்கம் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானத்தினை எடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் கொலை ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் தற்போது பல தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகின்றன” என அமைச்சர் தலதா அத்துக்கோரள மேலும் தெரிவித்துள்ளார்.