இரவு நேரத்தில் மூன்று பெண்களைக் கட்டி வைத்து நகைத் திருட்டு !


யாழ்ப்பாணத்தில் மூன்று பெண்களைக் கட்டிவைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்களிடமிருந்து ஆறு பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராயிலுள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

மூன்று பெண்களும் வீட்டில் இருந்தபோது அங்கு பிரசன்னமாகிய கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கியுள்ளதுடன் அவர்களது நகைகளைத் தருமாறு மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்கள் மூவரையும் கட்டிவைத்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் வீட்டிலிருந்த நகைகளையும் திருடிக்கொண்டு குறித்த கொள்ளையர்கள் மாயமாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.