தாழங்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !


மட்டக்களப்பு – கல்முனை வீதி தாழங்குடா சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து புதுக்குடியிருப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதுடன், வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்ரீட் கற்குவியல் மோதி நின்றுள்ளது.

இச்சம்பவத்தில் காரை செலுத்திச் சென்றவரும், கூலித் தொழிலாளியான புதுக்குடியிருப்பை சேர்ந்த 56 வயதான எஸ். ஆறுமுகம் என்பவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில், ஆரையம்பதி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் படுகாயங்களுக்குள்ளான கூலித் தொழிலாளி ஆறுமுகம் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.