மட்டக்களப்பில் சமுர்த்தி பணம் சுருட்டி எடுத்து தென்னைமர வட்டுக்குள் மறைப்பு



(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதான சமுர்த்தி திணைக்களத்திற்கு உரித்தான 57 இலட்சம் ரூபா நிதியை திணைக்களத்தில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கணக்காளரின் கையொப்பத்தை காசோலையில் மிகவும் நுட்பமாக வைத்து சமுர்த்தி பணத்தை சுருட்டி எடுத்துள்ளார். இச்சம்பம் செவ்வாய்க்கிழமை (14.82018) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தின் கணக்குப்பகுதிக்கான பொறுப்பாக கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் சமுர்த்தி திணைக்களத்திற்குரித்தான 57 இலட்சம் ரூபாவை சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் அவர்களின் சரியான கையொப்பத்தை காசோலையில் இட்டு(14.8.2018) அதனை வங்கியில் கொடுத்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

கொழும்பில் உள்ள சமுர்த்தி திணைக்களத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை குறித்த அலுவலத்தின் (திணைக்களத்தின் சராசரி நிலுவையை) மீதியை பரிசோதித்து கொழும்புக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்போது சமுர்த்தி திணைக்களத்தின் கணக்குக்கான வங்கிப்பணம் பரிசோதிக்கப்பட்டது.இதனால் சமுர்த்தி திணைக்களத்தின் வங்கிக்கணக்கு பரிசோதித்தலில் 57 இலட்சம் ரூபா காணாமற் போயுள்ளது.

இவ்விடயமாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸில் செவ்வாய்க்கிழமை(14) கணக்காளரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.இதனை விரிவாக ஆராய்ந்த பெரும்குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சமுர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவரையும்,இவருடன் பணத்திருட்டில் மட்டக்களப்பு கோப்பாவெளியைச் சேர்ந்த மேலும் எட்டுப்பெண்களை பணமோசடியில் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளுக்கு உட்படுத்தியதுடன் அவரது சொந்தவூரான வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள கரவட்டி கிராமத்திற்குச்சென்று வீடுகளைச் பரிசோதனைக்குட்படுத்தியுள்ளார்கள்.இதன்போது சந்தேக நபரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தின் வட்டுக்குள் இருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பொதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இப்பணத்தை குறித்த சந்தேக நபர் உறவினர்கள் நான்குபேரின் கணக்கிலத்திற்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.இப்பணத்தை உறவினர்கள் வங்கியிலிருந்து மீளப்பெற்று குறித்த சமுர்த்தி உத்தியோகஸ்தர் பெற்றுக்கொண்டார்.இப்பணத்தை சந்தேகநபர் தன்னுடைய வீட்டில் உள்ள தென்னைமரத்தில் உள்ள வட்டுக்குள் சூட்சூமமான முறையில் ஒழித்து வைத்துள்ளார்.

இவ்விடயமாக மட்டக்களப்பு தலைமைப் பொலிசார் சந்தேக நபர் உட்பட 9 பேரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இவ்வருக்கு எதிராக பொலிசாரும்,சமுர்த்தி திணைக்களமும் இணைந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு சுருட்டப்பட்ட பணத்தை குறித்த சந்தேக நபர் சிறியதொரு இனிப்பு பண்டமோ வாங்கிச் சாப்பிடவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.