உயர்தர பரீட்சை நேர அட்டவணை குழறுபடி ; ஏற்றுக்கொண்டது பரீட்சைகள் திணைக்களம்


நேர அட்டவணையை சரியான முறையில் கவனத்தில் கொள்ளாததினால் இம்முறை உயர்தர பரீட்சையில் சில பாடங்களுக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முரண்பட்ட நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டமையே காரணமாகும்.

இருப்பினும் , சரியான நேர அட்டவணையை உள்ளடக்கிய பரீட்சைக்கான அனுமதி அட்டை அனைத்து பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்த நேர அட்டவணையை பரிசீலனை செய்தால் இவ்வாறான சிக்கல் ஏற்பட்டிருக்காது என்று பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், மனிதாபிமானம் அடிப்படையில் பரீட்சார்த்திகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சிரமங்களுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் எதிர்பார்க்கும் நிவாரணம் தொடர்பிலான விடயங்கள் தற்பொழுது திரட்டப்பட்டிருப்பதாக பரீட்சையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு நேர அட்டவணைகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தவறு தொடர்பாக உடனடியாக கண்டறியப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.