மயிலம்பாவெளி சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக அமைச்சர் சஜித் விசாரணைக்கு உத்தரவு!

மட்டக்களப்பு, மயிலம்பாவெளியில் இடம்பெற்ற சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தரவிட்டுள்ளார்.

மயிலம்பாவெளியில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தினை திறந்து வைப்பதற்காக மட்டக்களப்பு விஜயம் செய்த  அமைச்சர் குறித்த சிறுமியின் இல்லத்திற்கும் சென்று சிறுமியின் பெற்றோரிடம் உரையாடினார்.

இதன்போது அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையினை விடுத்த அமைச்சர் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பில் முறையான விசாரணை செய்யப்பட்டு அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதான அனுரஞ்சித் அனுசிரா என்ற சிறுமி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் தாமரைத் தடாகத்தில் வீழ்ந்து உயிரிழந்தார்.

மயிலம்பாவெளி – காமாட்சி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியில், தாமரைத் தடாகம் அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.