திருகோணமலையில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு



திருகோணமலையில் மூன்றாவது 'சர்வதேச ஆராய்ச்சி மாநாடு' திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வீ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் அனுசரனையில் திருகோணமலை வளாக கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பமான இந்த ஆராய்ச்சி மாநாடு இன்று வரை இரு தினங்களாக நடைபெறுகின்றது.

சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் உள்ளூர் வளங்களையும், ஆற்றலையும் சர்வதேசத்துடன் இணைத்து கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளது. ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா மற்றும் பல நாடுகளைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், இலங்கை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இந்த ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்துகின்றனர்.

இந்த நிகழ்வில் ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா மற்றும் பல நாடுகளைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்களது பல ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இளைஞர் அபிவிருத்தி , சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை, கடல்சார் வள அபிவிருத்தி போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஜெயசிங்கம் மற்றும் கிழக்கு மறைமாவட்ட ஆயர் இமானுவேல் ,கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.