தமிழ் மக்களின் கொலைக்குக் காரணமாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் - தவராஜா


அண்மையில் இடம்பெற்ற மாநகரசபை அமர்வின் போது மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக மாநகரசபையின் கலைக் குழு சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தவேண்டி அவசியம் பற்றி மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டு அனைவரின் அனுமதியுடனும் சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது. இதனை அன்னாரின் குடும்பத்தினருக்கு மாநகரசபை சார்பில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறுக்கறுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் றொனி அவர்கள் கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை அரசியல் ரீதியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாது என்று தெரிவித்தார்.

இதற்கு உறுப்பினர் தவராஜா அவர்கள் பதில் கூறுகையில் ஈழத் தமிழர்களின் நிலைமைக்கு கருணாநிதி மேல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் குறைகூறுவதற்கு முன்னர் அவர்கள் செய்தவற்றை சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தான் எமது மக்களின் கொலைக்குக் காரணமாக இருந்து காட்டிக் கொடுத்தவர்கள் என்பதை இச்சபையில் இருந்து உலகிற்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.