04 பேர்ச்சஸ் காணியிலும் கட்டிடங்கள் அமைக்கலாம் - முதல்வர் சரவணபவன்



மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 06 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி இருக்க வேண்டும் என இதுவரை இருந்த ஏற்பாட்டினைத் திருத்தி 04 பேர்ச்சர் காணியிலும் கட்டிடங்கள் அமைக்கலாம் என மாநகரசபையால் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.

கடந்த சபை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் (10) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு நகருக்குள் இடப்பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதால் தம்மிடமுள்ள காணிகளின் விஸ்தீரணத்துக்குள் கட்டிடங்களை அமைக்க முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் சிலர் என்னிடமும், மாநகரசபைக்கும் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க கடந்த 09வது மாநகரசபை அமர்வின் போது என்னால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னர் மாநகர எல்லைக்குள் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 6 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி இருக்க வேண்டும் ஆனால் தற்காலத்தின் சனநெரிசல், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார, சமூக நலனைக் கருத்திற்கொண்டு கட்டிடம் கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் ஆகக்குறைந்த காணி விஸ்தீரனத்தினம் 04 பேர்ச்சஸ் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானமானத்திற்கான வர்த்தமாணி வெளியிடப்பட்டதும் மாநகர எல்லைக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.