சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு



மட்டக்களப்பு மாவட்டதின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.

திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கோரளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகநேரித்திட்டம், தரவை மயான்கல் குளம், மற்றும் சிறிய நீரப்பாசனத்திட்டங்களுக்கான விவசாய ஆரம்பக் கூட்டத்தில் விவசாயிகளது கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால், கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர், கோரளைப்பற்று மத்தி பிரதேச சபைச் தவிசாளர், விவசாய, கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விவசாய நடவடிக்கைகளுக்கான கூட்டம் ஆரம்பமான வேளை மணல் அகழ்வு காரணமாக தம்முடைய விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் பெற்றுக் கொள்வதில் சிரமம் காணப்படுகிறது. மணல் அகழ்வு நிறுத்தப்படாது விட்டால் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலழித்த மேலதிக அரசாங்க அதிபர், உடனடியாக செயற்படும் வகையில் இதற்கான அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாகவும் அத்துடன், குறிப்பிட்ட இடங்களுக்கு நேரடியான கள விஜயங்களை மேற்கொண்டு தீர்வுகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததையடுத்து, விவசாயிகள் வெளியேறும் நிலை தடுக்கப்பட்டது.