வெடி விபத்தில் உயிரிழந்த கணவன் – சோகத்தில் நஞ்சறுந்திய மனைவி !



முல்லைத்தீவு மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் நேற்று முன்தினம்(திங்கட்கிழமை) கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நிலத்தில் மறைந்து கிடந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் இன்று(புதன்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார்.

வவுனியா பறநாட்டாங்கல்லை சேர்ந்த இராசேந்திரன் நிதர்சன் வயது 28 என்ற இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் திருமணம் முடித்து 8 மாதங்களேயான நிலையில், கணவனது நிலையை தாங்கமுடியாது அவரது மனைவி நேற்றைய தினம் நஞ்சருந்தியுள்ளார்.

நேற்று காலை தனது கணவனை வவுனியா வைத்தியசாலையில் வந்து பார்வையிட்ட சாரதா(வயது 22) என்றஅவரது மனைவி கணவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் மனமுடைந்த நிலையில் நஞ்சருந்தியுள்ளார்.

பின்னர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவமான வவுனியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.