‘த.தே.கூ நினைத்தால் நாடாளுமன்றம் இன்றும் கலையும்’


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நினைத்தால், நாடாளுமன்றத்தை இன்றுகூட கலைக்கக்கூடிய பலமிக்க கட்சியாகவே த.தே.கூ பலம்பெற்றுள்ளது என, அக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கப் போராடும் அதேவேளை, அபிவிருத்தியையும் செய்து கொண்டு, எதிர்ப்பு அரசியலை விட்டு, சாணக்கிய அரசியலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 நிகழ்வொன்றில் , பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் உட்பட உலக நாடுகள் கேள்வி கேட்கின்ற நிலைமையை உருவாக்கியது, த.தே கூட்டமைப்பே எனவும், அதைத் தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாது எனவும் தமிழர்களுக்கான பலம் என்றைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எனவும் தெரிவித்தார்.
"த.தே.கூ இல்லாத எந்தவொரு தீர்வும் அதிகாரப் பகிர்வும், சரியான முடிவாக இருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நேற்றும் இன்றும் எப்போதும், போராடும் கட்சியாகவே இருந்து வருகிறது" என, அவர் மேலும் தெரிவித்தார்.